கடலில் குளித்த 2 மென்பொறியாளர்கள் அலையில் சிக்கி பலி!

சிதம்பரம் அருகே கடலில் குளித்த 2 மென்பொறியாளர்கள் அலையில் சிக்கி பரிதாப பலியாகினர்.

சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 2 பெண் உள்ளிட்ட 6 ஊழியர்கள் இன்று (ஜூலை 21) மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்துள்ளனர்.

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சென்று சுற்றி பார்த்து விட்டு, பின்னர் அங்கிருந்து சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர்.

அப்போது ராட்சத அலையில் சிக்கி சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஷாம்சுந்தர் (26), கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த கோகுல்பிரசாத் (26) ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதையடுத்து மற்றவர்கள் கூக்குரல் எழுப்ப அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த புதுச்சத்திரம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News