சினிமா
தன் குழந்தைக்கு இதயத்தில் 2 ஓட்டை ! பிபாஷா பாசுவின் உருக்கமான பதில் !
நடிகை பிபாஷா பாசு பாலிவுட் மட்டுமன்றி கோலிவுட் வரை பல்வேறு மொழிகளின் திரைப்படங்களில் தனது இணையற்ற கவர்ச்சி மற்றும் வசீகர நடிப்பால் கலங்கடித்தவர். அந்த வகையில் தமிழில் விஜய் உடன் இவர் நடித்த சச்சின் திரைப்படம் குறிப்பிடத்தக்கது. தற்போது மணமாகி குடும்பம், வாரிசு என செட்டிலாகி இருக்கும் பிபாஷா பாசு, ஒரு தாயாக தான் எதிர்கொண்ட வேதனை அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார்.
மற்றொரு பாலிவுட் நடிகையான நேஹா தூபியாவுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் பங்கேற்று உரையாடி வந்த பிபாஷா பாசு, மகள் தேவி தொடர்பான கேள்விக்கு உடைந்து போனார். அப்போதுதான் மகள் குறித்தான மருத்துவ சவால் ஒன்றையும், அதனை போராடி கடந்து வந்தது குறித்தும் உருக்கத்துடன் விளக்கினார்.
”மகள் தேவி பிறந்த மூன்றாவது நாளில் அவரது இதயத்தில் 2 ஓட்டை இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெளிவானது. மகள் பிறந்த மகிழ்ச்சியை அப்போதுதான் கொண்டாட ஆரம்பித்திருந்தோம். ஆனால் அதற்கு வழியின்றி, இதய ஓட்டை விவகாரம் எங்கள் மகிழ்ச்சியை பறித்தது.
அதன் பிறகான ஒவ்வொரு நாளும் எங்கள் வாழ்வின் வேதனையான தினங்களாக கழிந்தன. மகளுக்கு 3 வயதாகும் போது அவளுக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நடந்தது. அறுவை சிகிச்சை அறையின் வெளியே காத்திருந்த 6 மணி நேரமும் ஒரு தாயாக நான் அடைந்த வேதனை, உலகில் வேறெந்த பெண்ணுக்கும் வாய்க்கக்கூடாதது. சரியான நேரத்தில், சரியான மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டதால், மகள் தேவி முழுமையாக எங்களுக்கு கிடைத்தாள்” என்று கலங்கிய கண்களுடன் பதில் தந்திருந்தார் பிபாஷா பாசு.
இதைக்கண்ட ரசிகர்கள் அனைவரும் வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர். எதிர்வரும் நவம்பர் 12 அன்று மகளின் முதல் பிறந்தநாளை முழு உற்சாகத்துடன் கொண்டாட இப்போதே தயாராகி வருகிறாராம் பிபாஷா பாசு. தனது தனிப்பட்ட சோகத்தை பொதுவெளியில் பகிர்ந்ததன் மூலம் குழந்தைகள் எதிர்கொள்ளும் இதய பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் பிபாஷாவுக்கு பாராட்டுகளும் குவிகின்றன.