கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநிலத் தொழிலாளர்கள் 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையிலுள்ள ‘சக்தி பாஸ்ட் புட்’ கடையில் ‘சிக்கன் ரைஸ்’ பார்சல் வாங்கி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக குருபரப்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திக் கடந்த 19-ம் தேதி கடையின் உரிமையாளர் சென்னப்பன் (42) என்பவரை கைது செய்தனர். மேலும் உணவகத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.