வடமாநில வாலிபர்களிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது..!!

பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் முத்துக்குமாரசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு பீகாரைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை என்பதால் அங்கு பணிபுரியும் சுஜித் குமார், ராஜேந்திர யாதவ், புசன் குமார் ஆகிய 3 பேர் பொருட்கள் வாங்குவதற்காக பல்லடத்தை நோக்கி வந்துள்ளனர். அப்போது அவர்களை வழிமறித்த 3 வாலிபர்கள் அவர்களை மிரட்டி அவர்கள் வைத்திருந்த ரூ 3 ஆயிரத்தை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

மொழி தெரியாததால் தவித்த அவர்கள் மீண்டும் வேலை செய்யும் கட்டிடத்திற்கு திரும்பிச் சென்று இதுகுறித்து மேஸ்திரி விஜயகுமாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து பல்லடம் காவல் நிலையத்தில் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

நேற்று பல்லடம் – மாணிக்காபுரம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியே வந்த சந்தேகத்திற்கிடமான 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் பீகார் வாலிபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News