தமிழகம்
அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!
மணல் குவாரி முறைகேடு வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணர், கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார், தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (ஏப்.25) விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.
மணல் விற்பனையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை மணல் குவாரி அதிபர்கள் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது.
இதன் தொடர்ச்சியாக நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடம் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்களை பெற்ற நிலையில், மணல் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததை அடுத்து, மணல் குவாரிகள் நடத்துவதற்கான உரிய அனுமதியை அந்தந்த மாவட்ட மாவட்ட ஆட்சியர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பதால் ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
பலமுறை சம்மன் கொடுக்கப்பட்டு அதிகாரிகள் ஆஜராகாமல் உயர்நீதிமன்றத்தை நாடினர்.
உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வழக்கு தொடுத்தது.
உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்ற தீர்ப்பை ரத்து செய்து ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கடந்த வாரம் உத்தரவிட்டது.