சிம் கார்டு மூலமாக நிகழ்த்தப்படும் மோசடிகளைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக, மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சிம் கார்டு தொடா்பான மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் 52 லட்சம் இணைப்புகளை மத்திய அரசு துண்டித்துள்ளது. மேலும், சுமார் 67,000 முகவா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்காக முகவா்கள் மீது 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிம் கார்டு சார்ந்த மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், அவற்றை விற்பனை செய்வதற்கான உரிமத்தை முகவா்களுக்கு வழங்கும் முன், அவா்களது விவரங்களைக் காவல் துறையினா் ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமங்களை வழங்கும் மையமோ அல்லது சிம் கார்டு நிறுவனங்களோ முகவா்களது விவரங்களைத் தனியாக ஆய்வு செய்யும்.
அதிக எண்ணிக்கையிலான சிம் கார்டுகளை ஒரே நபருக்கு விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக ‘பிசினஸ் இணைப்பு’ என்ற புதிய வழியின் கீழ் பல சிம் கார்டுகளை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் முகவா்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
நாட்டில் தற்போது சுமார் 10 லட்சம் சிம் கார்டு முகவா்கள் உள்ளனா். அவா்களது விவரங்களை ஆய்வு செய்வதற்கு உரிய அவகாசம் வழங்கப்படும். புதிய விதிமுறைகள் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அவற்றை நடைமுறைப்படுத்த முகவா்களுக்கு 6 மாதம் அவகாசமும் வழங்கப்படும் என்றார் அவா்.