அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் செப்.18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 டிசிசி (ஓட்டுநர் – நடத்துநர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இன்று (ஆக.18) பிற்பகல் 1 மணிமுதல் செப்.18-ம் தேதி பிற்பகல் 1மணி வரை ww.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் டிசிசி (ஓட்டுநர் – நடத்துநர்) பதவிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இப்பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும். தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன்தேர்வு (செய்முறை) மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.