சாமி கும்பிடக்கூடாது என்று நாங்கள் சொல்லவே இல்லையே: உதயநிதி ஸ்டாலின்!

சாமி கும்பிடக்கூடாது என்று நாங்கள் சொல்லவே இல்லையே; அது அவரவர்களின் இஷ்டம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

தமிழ்நாடு எழுத்தாளர் முற்போக்கு சங்கத்திற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு முக்கியமான விஷயத்தை பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். இன்னைக்கு ஒட்டுமொத்த இந்தியாவுமே அதைப்பற்றி பேசிக் கொண்டு இருக்கிறது. பேச வேண்டும். நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வரும் என நேற்று பேசும் போதே நான் சொன்னேன். அதனால் நான் சொன்ன மாதிரி நடந்துள்ளது.

நான் மீண்டும் சொல்கிறேன். சனதான கோட்பாடுகளைத்தான் நான் விமர்சித்தேன். சனாதன கோட்பாடுகளைத்தான் நான் ஒழிக்க வேண்டும் என்று சொன்னேன். அதை நான் பேசிக்கொண்டேதான் இருப்பேன். ரொம்ப பயித்திகாரத்தனமாக நான் இனப்படுகொலை எல்லாம் அழைப்பு விடுத்தேன் என சொல்கிறர்கள். இனப்படுகொலை என்ற வார்த்தையை நான் எங்கும் பயன்படுத்தவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. நான் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் உள்ளது. அதில் பாருங்கள் தெரியும்.

சாமி கும்பிடக்கூடாது என்று நாங்கள் சொல்லவே இல்லையே; அது அவரவர்களின் இஷ்டம். கோயிலுக்குள் அனைவரையும் அனுமதித்தீர்களா ? அதற்காக நாங்கள் சட்டப்போராட்டம் நடத்தினோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உரிமையை பெற்றுக்கொடுத்தது திமுக. நான் உறுதியுடன் இருக்கிறேன்; எத்தனை வழக்கு வந்தாலும் பார்த்துக்கலாம்; எந்தவொரு மதத்திற்கு எதிராகவும் நான் பேசவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

RELATED ARTICLES

Recent News