கேரளாவில் ஏடிஎம் மையங்களில் பணம் திருடிவிட்டு ஹரியாணா, ராஜஸ்தான் எல்லையில் பதுங்கி இருந்த குற்றவாளிகளை போலீஸார் கைதுசெய்தனர்.
ஹரியாணா மாநிலம் கான்சாலியைச் சேர்ந்த ஜியா உல் ஹக் (35), நவேத் (28) ஆகிய இருவரும் திரைப்பட பாணியில் உள்ளதுபோல் ஏடிஎம்இல் பணம் திருடியுள்ளனா்.
இவர்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் போது, ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுத்து, அந்த தொகை குறித்த விவரம் வங்கிக்கு செல்லாத வகையில் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள். அவ்வாறு செய்து பணம் திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தொடர் புகார்கள் வந்ததை அடுத்து, போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், இருவரும் ஹரியாணா, ராஜஸ்தான் எல்லையில் உள்ள கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரள போலீஸார், ஹரியாணா காவல்துறை உதவியுடன் இருவரையும் கைது செய்தனர்.
வழக்கமாக காவல்துறையினர் பிடிக்க வரும் போது அவர்களைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்பவர்கள் என்பதால், கேரள போலீஸார், இரவு நேரத்தில் மறைந்திருந்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் திருச்சூர் அழைத்து வரப்பட்டநிலையில்,தீவிர விசாரணைக்கு பிறகு இருவரும் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.