சென்னை பாரிமுனை பகுதியில் சாலையோரம் வசித்து வருபவர் வெங்கடேசன் (32). கூலி வேலை செய்து வரும் இருவருக்கு திருமணமாகி வான்மதி (26) என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மது போதைக்கு அடிமையான வெங்கடேசன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் மனைவி வான்மதி நடத்தையில் சந்தேகம் அடைந்து தினமும் அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இன்று மதியம் வான்மதி கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு வருவதாக தனது கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு வெங்கடேசன் அங்கு யாரை பார்க்க போகிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இருப்பினும் வான்மதி ரயிலில் கிண்டிக்கு சென்ற நிலையில் கணவர் வெங்கடேசனும் மனைவியை பின் தொடர்ந்து சென்றார்.
கிண்டி ரயில் நிலையத்தில் வான்மதி இறங்கிய போது அவரை பின்தொடர்ந்தது சென்ற கணவர் வெங்கடேசன் அவரை தடுத்து நிறுத்தி சண்டையிட்டுள்ளார். நீண்ட நேரம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த கணவர் வெங்கடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வான்மதியை குத்தி கொலை செய்ய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..
இதனை பார்த்த பயணிகள் உடனே இது குறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மாம்பலம் ரயில்வே போலீசார் சம்பவ உ=இடத்திற்கு விரைந்து சென்று வான்மதியை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.