Connect with us

Raj News Tamil

வெஸ்ட் நைல் வைரஸ்.. ஒருவர் பலி.. தமிழகத்தில் வேகமெடுக்கும் அதிரடி நடவடிக்கை…

இந்தியா

வெஸ்ட் நைல் வைரஸ்.. ஒருவர் பலி.. தமிழகத்தில் வேகமெடுக்கும் அதிரடி நடவடிக்கை…

கொரோனா வைரசின் தாக்கம் இப்போது தான் படிப்படியாக குறைந்து, இயல்பு வாழ்க்கையை பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வேறு ஏதேனும் வைரஸ் பரவக் கூடாது என்பதில், அனைத்து நாட்டு அரசும் தீவிரமாக உள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் என்ற புதிய வைரஸ், பரவி வருகிறது. கொசுவின் மூலம் பரவக் கூடிய இந்த வைரசால், ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளா மாநிலம் அருகிலேயே தமிழகத்தின் கோவை பகுதி இருப்பதால், அங்கும் இந்த வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக, தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கையை எடுததுள்ளது.

அதாவது, கோவையில் உள்ள பல்வேறு கிராமங்களில் இந்த வைரசை தடுப்பதற்கு, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 நடமாடும் மருத்து அணி உருவாக்கப்பட்டு, இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை உறுதி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, காய்ச்சல், குளிர் காய்ச்சல், இறுக்கமான கழுத்து, தலைவலி, நடுக்கம் மற்றும் தசை பலவீனமாகுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில், நுன்னுயிரியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றி வரும் டாக்டர்.ஆர்.ராமநாதன், இதுகுறித்து பேசும்போது, “வெஸ்ட் நைல் வைரஸ் என்பது மிகவும் ஆபத்தானது.

அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிரச்சனையின் தன்மை அதிகமாவதை தடுப்பதற்கு, ஆரம்ப கட்டங்களிலேயே, முறையான சிகிச்சை வழங்க வேண்டும்.

சரியான நேரத்தில் நோயாளிக்கு சிகிச்சை வழங்கப்படவில்லையென்றால், அது கோமா நிலைக்கு அழைத்து சென்றுவிடும். சில நேரங்களில் உயிரே போகும் அபாயம் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.

இதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத்துறையின் துணை இயக்குநர் டாக்டர் பி.அருணா பேசும்போது, “கேராள மாநிலம் திருச்சூர், கோழிகோடு மற்றும் மலப்புரம் பகுதியில் உள்ள பலர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, கோவையில் காய்ச்சல் பாதிப்பு உள்ள நபர்களை பரிசோதிப்பதை, சுகாதாரத்துறை அதிகரித்துள்ளது.

மேலும், காய்ச்சல் ஏற்பட்டு, அரசு மருத்துவமனைக்கு வந்துள்ள நோயாளிகளுக்கு, வெஸ்ட் நைல் வைரஸ் ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகங்களுக்கும், மாநில சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது” என்று கூறினார்.

More in இந்தியா

To Top