சென்னையில் முன்பகை காரணமாக ரவுடி வெட்டிக்கொலை!

சென்னையில் முன்பகை காரணமாக ரவுடி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் 30 வயதாகும் உதயகுமார். இவர் நேற்று இரவு வில்லிவாக்கம் பகுதி எம் ஆர் நாயுடு இரண்டாவது தெருவில் சென்று கொண்டிருந்த பொழுது அவரை வழிமுறைத்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட மர்ம கும்பல் உதயகுமாரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. அதில் தலையில் பலத்த காயமடைந்த உதயகுமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே சரிந்துள்ளார்.

இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உதயகுமார் நள்ளிரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள வில்லிவாக்கம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரபல ரவுடியான ரஞ்சித் என்கின்ற டபுள் ரஞ்சித் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்பகை காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அக்கொலை வழக்கில் உதயகுமார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் டபுள் ரஞ்சித்தின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக உதயகுமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடிய ஐந்து பேரை சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News