புதுக்கோட்டை புது அரண்மனை வீதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாகன விற்பனை மையம் திறப்பதற்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பணிபுரியும் இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் செயல்பட்டு வரும் டீக்கடையில் டீ பார்சல் வாங்கி வந்து அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது டீ சுவையில் வித்தியாசம் இருந்ததை அறிந்த இளைஞர்கள், டீ கடைக்காரரிடம் சென்று விசாரித்துள்ளனர். அப்போது டீ தயாரிக்க பயன்படுத்திய தண்ணீர் பேரலில் பார்க்கையில், தண்ணீரில் அழுகிய நிலையில், எலி ஒன்று இறந்து கிடந்துள்ளது.
டீ குடித்த அந்த 7 இளைஞருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக 7 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.