சென்னை அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே டன்லப் மைதானம் அமைந்துள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட டன்லப் தொழிற்சாலை மூடப்பட்டு, பாழடைந்த நிலையில் உள்ளது.
இந்நிலையில் அங்கு பெண் ஒருவரின் உடல் ரத்தவெள்ளத்தில், நிர்வாணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பிரத பரிசோதனைக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் தடவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கும் எனவும், இறந்து 2 நாட்களான நிலையில், உடலில் பல்வேறு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில், உடல் அழுகிய நிலையில் இருந்ததும் தெரியவந்தது.
மேலும் இறந்த பெண்ணை மர்ம நபர்கள் கற்பழித்துக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அம்பத்தூர் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம் எதிரிலேயே பாழடைந்த தொழிற்சாலை இடத்தில் 35-வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.