தமிழ்நாட்டில் சமீப காலமாகவே குறைந்திருந்த அரிசியின் விலை, தற்போது திடீரென அதிகரித்து காணப்படுகிறது. அதிகரிக்கும் உற்பத்தி செலவு, வேலையாட்களின் சம்பள உயர்வு, மின் கட்டண உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்ற பல்வேறு காரணங்களினால், அரிசி விலை உயர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.
அந்தவகையில், ஒரு கிலோ புழுங்கல் அரிசி ரூ.50 முதல் ரூ.76 வரையும், பச்சரிசி ஒரு கிலோ ரூ.70 வரையும் விற்கப்படுகிறது.. அரிசியின் தரத்தையும், அதை உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் பொறுத்து விலை மாறுபடுகிறது என்றாலும், சில குறிப்பிட்ட பிராண்ட்கள் விலைகள் எப்போதுமே ரூ.70-க்கு மேல்தான் விற்கப்படுகின்றன.. இந்த விலை, இனிவரும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்கிறார்கள் அரிசி வியாபாரிகள்.
இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் – அரிசி வணிகர்கள் சங்க சம்மேளன தலைவர் டி.துளசிங்கம், பொது செயலாளர் டாக்டர் ஏ.சி.மோகன் சொன்னதாவது: ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, மேற்கத்திய நாடுகளுக்கு உயர் சன்ன ரக அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதனால், கடந்த வருடம் ஜூன் முதல் டிசம்பர் வரை அரிசி விலை உயர்ந்திருந்த நிலையில், இதற்கு பிறகுதான் வணிகர்களின் வலியுறுத்தலையடுத்து, மத்திய அரசு 20 சதவீத சுங்கவரி விதித்ததால் ஏற்றுமதி குறைந்து அரிசி விலை சீரானது… எனினும், ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் மூலமாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தற்போது வலியுறுத்தி வருகிறோம்.
தவிர, அரிசி ஆலைகளில் வேலை செய்ய, வடமாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதால் உற்பத்தி செலவு அதிகமாகிறது.. கரண்ட் பில் உயர்வால் 1,800 அரிசி ஆலைகளின் உற்பத்தி செலவும் அதிகமாகிறது. அரிசியின் மொத்த விலையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவு அதிகரிப்பு, ஏற்று கூலி, இறக்கு கூலி போன்ற செலவினங்களால் அரிசியின் சில்லறை விலையில்தான் மாற்றம் வருகிறது” என்றனர்.