கவரப்பேட்டை ரெயில் விபத்து: சதிச்செயல் காரணமா? மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய திருவள்ளூர் மாவட்ட கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக, ஏற்கெனவே 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில், மேலும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னை பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் கடந்த அக். 11- ஆம் தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாக்மதி விரைவு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்த நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இவ்விபத்து குறித்து பாக்மதி விரைவு ரெயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரெயில் பாதுகாவலர் (கார்டு), பயணச்சீட்டு பரிசோதகர், ஏசி பெட்டி பணியாளர்கள் மற்றும் பேன்ட்ரி அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரெயில் நிலைய அதிகாரி, பொன்னேரி மற்றும் விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலர் உள்ளிட்ட 13 பிரிவுகளைச் சேர்ந்த 40 ரெயில்வே அலுவலர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெற்கு ரெயில்வே பாதுகாப்புத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி தலைமையில்
40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கவரப்பேட்டை ரெயில் விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமில்லை எனவும், நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் முன்னதாக வழக்குப் பதியப்பட்டு இருந்த நிலையில் மேலும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய ரெயில்வே சட்டப்பிரிவு – 150 ரெயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயிலை சேதப்படுத்துதல் அல்லது தகர்க்க முயலுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News