அரசியல்
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி மீண்டும் கட்சியில் இணைந்தார்..!
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த 5-ம் தேதி அதிமுகவில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து மேலும் சில பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி மீது அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடியை 6 மாத காலம் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்வதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் நேற்று இரவு அறிவித்த நிலையில் இன்று காலை தினேஷ் ரோடி மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டார்.
நேற்று இரவு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி இன்று காலை கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment Login