தமிழகம்
திமுக மீது கறை பூசுவதற்கு ஒரு கூட்டம் முயற்சி: உதயநிதி ஸ்டாலின்!
திமுக மீது கறை பூசுவதற்கு ஒரு கூட்டம் முயற்சி செய்து கொண்டு இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மாநில ஆதிதிராவிடர் நலக்குழுவின் அனைத்து மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அறிமுக கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திமுக தலைவரின் 71 வது பிறந்த நாளையொட்டி நலிவுற்ற ஆதிதிராவிடர்களுக்கு பொற்கிழி வழங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமத்துவத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்றும் சாதி கொடுமைகளுக்கு எதிராக போராடியவர் தான் கலைஞர் என்றார். அதே வழியில் செயல்பட்டு வருபவர் முதலமைச்சர் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக மீது கறை பூசுவதற்கு ஒரு கூட்டம் முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. அது எப்போதும் நடக்காது என்றும் சமூக வலைதளங்களில் கட்சிக்கு எதிராக பரப்பபடும் அவதூறுகளுக்கு உடனடியாக பதில் அளிக்கவேண்டும் என்றார். மதத்தை அரசியலாகும் அரசியலை மதமாக பார்க்கும் பாசிஸ்டுகளாக இருக்கிறார்கள்.
மேலும், ஈடி ரைடு, வருமான வரி சோதனை என்று எங்களை பயமுறுத்த பார்க்கிறார்கள். ஆனால் எங்கள் வீட்டு கைக்குழந்தைகள் கூட உங்களை பார்த்து பயப்படாது, அடிமைகள் அடமானம் வைத்த மாநில உரிமைகளை மீட்க வேண்டும் என்றால் உங்களது உழைப்பு முக்கியம் என்றார்.
எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது நாடாளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாக இருப்பதற்கு தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கு வாக்குகளை அளித்தார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் கலைஞர் தான் வேட்பாளர் என்ற உணர்வோடு தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் கேட்டுக்கொண்டார்.
2021 ஆம் ஆண்டு அடிமைகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். இந்த தேர்தலில் அடிமைகளின் ஓனர்களை அனுப்பி வைப்போம் என்று தெரிவித்தார். கூட்டத்தில் தங்களோடு சேர்ந்து உணவருந்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குழு உறுப்பினர்களோடு அமர்ந்து உணவருந்தினார்.