தமிழகம்
தீ மிதி திருவிழாவின் போது திடீரென நெருப்பில் விழுந்த நபர்..!!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அம்மினி குளக்கரையில் உள்ள கன்னியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைப்பெற்றது. அதைத்தொடர்ந்து கெங்கையம்மன் ஆலயம் அருகே இரவு தீமிதி விழாவிற்கான நெருப்புகள் கலைக்கப்பட்டு தீ மிதிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அங்கே, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதி விழா நடைபெறும் இடத்தை சுற்றி இருந்தனர்.
பக்தர்கள் தலையில் தீச்சட்டி மற்றும் அம்மன் பூ குடங்களுடன் தீ மிதிக்க தொடங்கினார்கள். அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் உடல் நிலை சரியில்லாமல் கால் சரியாக நடக்க முடியாத நபர் ஒருவர் திடீரென தீயில் இறங்கி நடக்க முடியாமல் நெருப்பில் விழுந்தார்.
உடனே அருகில் இருந்த பக்தர்கள் பலர் அவரை நெருப்பில் இருந்து அப்புறப்படுத்தி காப்பாற்றினார்கள். நெருப்பில் விழுந்த நபருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நபரை பக்தர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பொதுவாக தீமிதி திருவிழா நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால், இந்த தீமிதி திருவிழாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் இருந்ததால் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.