இந்தியா
வைர வா்த்தக மையமா ? திறந்து வைத்தாா் மோடி !
இந்தியாவின் வைரத்தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்ந்து வருகிறது .இங்குதான் உலகின் 90 சதவீத வைரங்கள் பட்டை தீட்டப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் , வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்திலும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் விதத்தில் ‘சூரத் வைர பங்குச்சந்தை’ என்ற மிகப்பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
சூரத் வைர நகரில், 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளைக் கொண்டு இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடங்களை இணைக்கும் முதுகெலும்பு போல ஒரு மைய கட்டிடம் அமைந்திருக்கிறது.
இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுர அடி ஆகும். டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகளில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. இங்குள்ள 4 ஆயிரத்து 700 அலுவலகங்களையும், கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே வைரத் தொழில் நிறுவனங்கள் வாங்கிவிட்டன. இந்நிலையில், இந்தக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். கடந்த 80 ஆண்டாக உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் தற்போது முந்தியுள்ளது.