தமிழகம்
குளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு!
சென்னையை அடுத்த மேடவாக்கம் காந்திநகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அபிநயா, இவர்களுக்கு இரண்டு வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தன்ஷிகாவை காணவில்லை.
இதையடுத்து அவரது தாயார் அபிநயா தேடி பார்த்து உள்ளார். அப்பொழுது வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குழந்தை தன்ஷிகா மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது குழந்தை தன்ஷிகா ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இது குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.