சிறைக்கு செல்வதற்காக போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்!

சென்னை அண்ணாநகர் மேற்கு அன்னை சத்யா நகரில்
நேற்று இரவு (ஜூலை 25) மதுபோதையில் நடந்து வந்த வாலிபர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை போலீஸ் பூத் அருகே இருந்த சுவற்றில் வீசியதில் பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது‌‌.

பின்னர் அதே வாலிபர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு மற்றோரு பெட்ரோல் குண்டை வீசிய போது அது கடைக்கு முன்பு வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தது.

அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அதிஷ்டவசமாக இதில் யாருக்கும் எவ்வித காயமுமோ பாதிப்போ ஏற்படவில்லை.

உடனடியாக அருகில் வாலிபர்கள் சிலர் அந்த நபரை பிடித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், பிடிப்பட்ட நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் அண்ணாநகர் அன்னை சத்யா நகரை சேர்ந்த பாலமுரளி (31) என்பதும் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயுடன் திருச்சிக்கு சென்ற பாலமுரளி அங்கேயே வசித்து வந்த நிலையில், மது போதைக்கு அடிமையாகி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து சென்னை வந்த பாலமுரளி சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இரு பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி திரி வைத்து கொளுத்தி வீசியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.‌

இதனையடுத்து போலீஸார் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பாலமுரளியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News