இந்தியா
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை..!
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து ஜே.இ.இ நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
சமீப காலமாக இங்கு பயின்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் அங்கு 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களுக்கு ராஜஸ்தான் அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இந்நிலையில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது சையிது என்ற மாணவர், கோட்டாவில் உள்ள ஜவகர் நகர் பகுதியில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். அவர் 2-வது முறை நீட் தேர்வு எழுத தயாராகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முகமது சையிது தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)