தமிழகம்
கஞ்சா போதையில் வியாபாரியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்
திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வசித்து வந்தவர் கார்த்தி (22). நரிக்குறவரான இவர் சென்னை புறநகர் மின்சார ரயிலில் மணி, மணிமாலை ஊசி, விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்த புறநகர் மின்சார ரயிலில் கார்த்தி மனைவி இந்திராணியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது கஞ்சா போதையில் இருந்த தமிழரசன், கார்த்தி மற்றும் அவனது மனைவி இந்திராணியிடம் வீண் தகராறில் ஈடுபட்டார்.
புட்லூர் ரயில் நிலையத்தில் கார்த்தி தனது மனைவி இந்திராணியுடன் இறங்கிய போது பின்னால் இறங்கிய தமிழரசன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு நரிக்குறவர் கார்த்தி விற்பனைக்காக பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்தியை கழுத்தில் குத்தி கிழித்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் உயிரிழந்த கார்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
திருத்தணி பகுதியை சேந்த தமிழரசன் வீடு வாசல் ஏதுமின்றி கஞ்சா மற்றும் குடி போதையில் சுற்றித்திரிவதோடு வீண் தகராறில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதனையடுத்து தப்பியோடிய தமிழரசனை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.
கஞ்சா போதையில் நரிக்குறவர் இளைஞரை ஒருவர் குத்தி கொலை செய்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.