தமிழகம்
குப்பையில் கொட்டப்பட்ட ஆதார், பான் கார்டுகள்.. சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி !
சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச ஒருங்கிணைந்த விமான முனையத்தில் நேற்று காலை குவியல், குவியலாக ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள், மற்றும் அடையாள அட்டைகள் கொட்டி கிடந்தன. இதை பார்த்த விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பேசிய சென்னை விமான நிலைய அதிகாரிகள், “சென்னை விமான நிலையத்தில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு ஆதார் கார்டுகள், பான் கார்டுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே பயணிகள் கொண்டு வரும் ஆதார் கார்டுகளை, சிலர் தவறுதலாக விட்டு செல்கின்றனர். சில பயணிகள் கைகளில் இருந்து தவறி கீழே விழுந்து விடுகின்றன.
இதனை விமான நிலைய ஊழியர்கள் எடுத்து வந்து, விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைப்பார்கள்.அங்கு குறிப்பிட்ட காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும். கார்டுகளை தவறவிட்டவர்கள் வந்து, பெற்று செல்வார்கள். ஆனால் நீண்ட காலமாக யாரும் வராமல் தேங்கி கிடக்கும், கார்டுகளை இதைப்போல் குப்பைகளோடு சேர்த்து விடுகிறோம் என அவர் கூறியுள்ளார்.
ஆதார்,பான் கார்டுகளின் எண்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவைகளை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள், தவறுகள், மோசடிகள் நடக்கும் நிலையில், பயணிகள் விட்டுச் சென்ற ஆதார், பான் கார்டுகளை, இதைப்போல் குப்பைத் தொட்டியில் போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.