Connect with us

Raj News Tamil

பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது செல்லாது- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியா

பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது செல்லாது- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தோடு தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களின் தண்டனை காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே குஜராத் அரசு தண்டனை குறைப்பு வழங்கி கடந்த 2022 ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

குற்றவாளிகளில் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். பல்வேறு பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியது. தீர்ப்பில், “குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், மராட்டிய அரசு தான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

More in இந்தியா

To Top