தமிழகம்
குட்கா வழக்கில் பாஜக நிர்வாகி கைது!
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் வீட்டிற்குள் வைத்து மாவா உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த பாஜக நிர்வாகி உட்பட நான்கு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடசென்னை பகுதியில் உள்ள கடைகளில் அதிகமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் கொருக்குப்பேட்டை நைனியப்பன் தெரு பகுதியில் செயல்பட்டு வரும் பச்சையம்மாள் மளிகை கடை பகுதியில் ஹான்ஸ் போன்ற குட்கா பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.
இது தொடர்பாக நுண்ணறிவு பிரிவு போலீசார் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த பச்சையம்மாள் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 1200 பாக்கெட் ஹான்ஸ், 30 கிலோ மாவா மற்றும் ஜர்தா உள்ளிட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டதை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ராயபுரம் பாஜக கிழக்கு மண்டல பொறுப்பாளர் ராஜேந்திரன் என்பவர் அளித்த பணத்தை வைத்து தான் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்ததாக பச்சையம்மாள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை அடுத்து போலீசார் பாஜக நிர்வாகி ராஜேந்திரன் மற்றும் லோகேஷ், நரேந்திர, பச்சையம்மாள் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலை மறைவாகியுள்ள மீதமுள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.