Connect with us

Raj News Tamil

பாஜக ஏராளமான மக்களை மீண்டும் ஏழ்மை நிலைக்கு தள்ளியுள்ளது: ராகுல் காந்தி!

இந்தியா

பாஜக ஏராளமான மக்களை மீண்டும் ஏழ்மை நிலைக்கு தள்ளியுள்ளது: ராகுல் காந்தி!

பாஜக ஏராளமான மக்களை மீண்டும் ஏழ்மை நிலைக்கு தள்ளியுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் காங்கிரஸ் கட்சியின் 139-வது நிறுவன தினத்தை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:

நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சாமானியா்களின் கைகளில் அதிகாரத்தை ஒப்படைப்பதை காங்கிரஸ் குறிக்கோளாக கொண்டுள்ளது. ஆனால், பாஜக ஏராளமான மக்களை மீண்டும் ஏழ்மை நிலைக்கு தள்ளியுள்ளது.

இரண்டு இந்தியாவை காங்கிரஸ் விரும்பவில்லை. பாஜக ஆட்சியில் பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனா். குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா கூட்டணி மட்டுமே இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும்.

ஓபிசி, தலித், பழங்குடியினா் சமூகத்தினருக்கு அவா்களின் மக்கள்தொகைக்கேற்ப பல்வேறு துறைகளில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. பிரதமா் நரேந்திர மோடி தான் ஓபிசி பிரிவைச் சோ்ந்தவா் என தன்னைத் தானே வா்ணித்துக்கொண்டாா்.

ஆனால், நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டபோது, ‘நாட்டில் ஒரே ஒரு ஜாதிதான் உள்ளது. அது ஏழ்மைதான்’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா். அப்படியென்றால், தன்னை ஏன் ஓபிசி பிரிவைச் சோ்ந்தவராக பிரதமா் குறிப்பிட்டாா்?

அனைத்து பிரிவினருக்கும் பல்வேறு துறைகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றாா்.

More in இந்தியா

To Top