பாஜகவினால் அழகிய மணிப்பூர் மாநிலம் இப்போது போர்க்களமாக மாறியிருக்கிறது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “147 நாட்களாக மணிப்பூர் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் பிரதமர் மோடிக்கு இன்னும் அங்கு செல்ல நேரம் கிடைக்கவில்லை. இந்த வன்முறையில் மாணவர்கள் குறிவைக்கப்பட்டிருக்கும் கொடூரமான படங்கள் வெளியாகி ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்தச் சண்டையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வன்முறை ஆயுதம் ஏந்தப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
பாஜகவினால் அழகிய மணிப்பூர் மாநிலம் இப்போது போர்க்களமாக மாறியிருக்கிறது. இந்த நேரத்தில் பிரதமர் மோடி, பாஜகவின் திறமையற்ற மணிப்பூர் முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும். இதுவே கொந்தளிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் படி” இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் மீது காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. மாநிலத்தில் வன்முறை தொடங்கியதில் இருந்து பிரதமர் அங்கு செல்லாதது குறித்து கேள்வியும் எழுப்பி வருகிறது.
முன்னதாக, கடந்த ஜூலை 6-ம் தேதி காணமல் போனதாக கூறப்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியான நிலையில், இம்பாலின் சிங்ஜமேய் பகுதியில் ஆர்ஏஎஃப் வீரர்களுக்கும் உள்ளூர் போராட்டக்காரர்களுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டது. மோதலைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர், கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 45 பேர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலுக்கு பின்னர் இம்பாலில் புதன்கிழமை அமைதி திரும்பி இருக்கிறது என்றாலும் பதற்றதம் நிலவுகிறது என்றார்.