தமிழகம்
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!இறுதியில் வெளிவந்த உண்மை !
சென்னை தெற்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று அதிகாலை 12.20 மணியளவில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதல்வர் முக.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு தனது இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் பதறிய போலீசார், தி,நகர் துணை ஆணையர் தலைமையில் தேனாம்பேட்டை போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் முக ஸ்டாலின் இல்லத்தில் சோதனை நடத்தினர். சுமார் 1 மணி நேரம் நடந்த தொடர் சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து தேனாம்பேட்டை போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி என்ற இடத்தில் வசிக்கும் இசக்கி முத்து(48) பேசியது தெரிய வந்தது. உடனே தேனாம்பேட்டை போலீஸார் கன்னியாகுமரி போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்று அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததை அடுத்து அவரது பெற்றோரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.