இன்று அதிகாலை சென்னை தெற்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார்.
இதையடுத்து தி,நகர் துணை ஆணையர் தலைமையில் தேனாம்பேட்டை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். சுமார் 1 மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபரின் செல்போன் நம்பரை வைத்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இசக்கி முத்து என்பவர் பேசியது தெரிய வந்தது.
இதன் பிறகு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இசக்கி முத்து(48) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.