Connect with us

Raj News Tamil

தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழகம்

தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தமிழகத்திலுள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வைத்தார்.

“நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்தது. பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம்.

மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்தத் திட்டத்தினை 2023-2024 ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் 13.1.2023 அன்று பேரவையில் அறிவித்தார்.

திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடி உணவருந்தினார்.

அதன் தொடர்ச்சியாக, 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்’ என்ற முதல்வரின் உன்னத நோக்கத்தை செயல்படுத்திட, வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நல்ல நோக்கத்திற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், ரூ.404.41 கோடி செலவில் 31,008 பள்ளிகளில் பயிலும் 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத்திட்டத்தை விரிவுப்படுத்தி தொடங்கி வைக்கும் விதமாக திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உணவு பரிமாறி, அவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார்.

காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவு

திங்கள்கிழமை:
காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா;

செவ்வாய்க்கிழமை:
காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி;

புதன்கிழமை:

காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல், வெண் பொங்கல்;

வியாழக்கிழமை:

காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா;

வெள்ளிக்கிழமை:

காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி ஆகியவை மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி, ரவை, கோதுமை ரவை, சேமியா. மேலும், அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படும்.

More in தமிழகம்

To Top