தமிழகம்
ஆவடியில் கணவன்-மனைவி கொடூரக் கொலை!
ஆவடி அருகே சித்த மருத்துவரும், அவரது மனைவியையும் நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த மிட்டனமில்லி, காந்தி மெயின் ரோடு 2-வது குறுக்கு தெருவில் சித்த மருத்துவர் சிவன் நாயர் 62, அவரது மனைவி பிரசன்ன குமாரி 55, கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள்.
பிரசன்னகுமாரி மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
இந்நிலையில் சிவன் நாயரும், பிரசன்ன குமாரியும், இரவு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஆவடி துணை ஆணையர் தலைமையில் தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சிவன் நாயரின் வீட்டில் சுமார் 100 பவுன் நகை வரை கொள்ளை போயிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
முத்தா புதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கொலை கொள்ளைகள் நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.