பேருந்தின் படியில் தொங்கியபடியும், பேருந்தின் பின்பக்கம் தொங்கிபடியும் சொல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த எஸ்.கொளத்தூர் அத்தியூர், அரியலூர் பகண்டை கூட்டுச்சாலை, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் நாள்தோறும் பேருந்துகளில் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் பேருந்து பற்றாக்குறை காரணமாக அப்பகுதியில் இருந்து வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்து படியில் இருபுறமும் தொங்கியபடி செல்கின்றனர். மேலும் ஆபத்தை உணராமல் பேருந்தின் பின்பக்கம் மாணவர்கள் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் சங்கராபுரம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
நாள்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் இதே போல் தான் சென்று வருவதாகவும் பேருந்து பற்றாக்குறையே இதற்கு காரணம் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.