புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் இன்று காலை கடற்கரை சாலையில் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.இதை அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சனாதனத்திற்கு எதிராக நாங்கள் போராடியதால் தமிழிசை சௌந்தர்ராஜன் போன்றவர்கள், துணைநிலை ஆளுநராக ஆக முடிந்தது என ஆ.ராசா நேற்று பேசியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “நாங்கள் உழைத்துத்தான் மேலே வந்தோம். சனாதனத்திற்கு எதிராக போராடுபவர்கள் அந்த கட்சியின் தலைவராக வர முடியுமா?” என்று எழுப்பினார்.மேலும் “சனாதனத்தை முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் , உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி ஏதும் தெரியாமல் பேசி வருகிறார். அவரது கட்சியில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் தலைவராகவோ அல்லது முதலமைச்சராகவோ வர முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அண்டை மாநிலமான புதுச்சேரியின் ஆளுநராக தமிழிசையும் இதுகுறித்து விமர்சனம் செய்திருப்பது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது.