இந்தியா
ஆந்திராவின் தலைநகரம் இதுதான்.. அறிவித்த சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், சமீபத்தில் நடைபெற்று, அதன் முடிவுகள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது. இதில், சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பாரதிய ஜனதா, ஜனசேனா ஆகிய கட்சிகள் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுக்கான கூட்டம் தற்போது நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சந்திரபாபு நாயுடு தான், முதலமைச்சர் வேட்பாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் வழங்கிய தீர்ப்பை, நிலைநிறுத்துவதற்கான பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
3 கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும், 100 சதவீதம் இணைந்து பணியாற்றினார்கள். தேர்தலில் 93 சதவீத இடங்களை வெற்றி பெற்றிருப்பது என்பது, நாட்டின் வரலாற்றில் ஒரு அரிதான விஷயம்.
57 சதவீத வாக்குகளை தேர்தலில் மக்கள் வழங்கி, ஆசிர்வதித்தார்கள். நாம் அனைவரும் மிகவும் பொறுப்புள்ள நபராக மாற வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ மாநிலத்தின் வளர்ச்சிக்கு, மத்திய அரசின் ஒத்துழைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்களது மாநிலத்துடன் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று மத்திய தலைவர்கள் கூறியுள்ளனர்” என்று கூறினார்.
“ஆந்திர பிரதேச மாநிலம் அழிவின் நிலையில் உள்ளது. அதற்கு புதிய வாழ்க்கையை கொடுப்பது என்பது எங்களது பொறுப்பு” என்று தெரிவித்தார்.
“இனிமேல், 3 தலைநகரங்கள் என்ற எதுவும் கிடையாது. அமராவதி தான் மாநிலத்தின் தலைநகராக இருக்கும். விசாகப்பட்டினத்தை, நிதி மற்றும் நவீன தலைநகராக மாற்றலாம்” என்று கூறினார்.
இதற்கு முன்பு நடந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில், ஆந்திராவில் 3 தலைநகரங்கள் இருந்தன. அதாவது, அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், குர்ணூல் நீதி சம்பந்தமான தலைநகராகவும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)