தமிழகம்
போதைப்பொருள் கண்டித்து: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!
திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாரியதைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி, திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதோடு தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதற்கும் போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமாக திமுக அரசு இருப்பதாக கண்டித்தும்; போதைப் பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிப் பகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இன்று மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடக்க உள்ளது.
குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை காமராஜர் சாலை, ஆர்ஏ புரம் பகுதியில் தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.கே அசோக் ஏற்பாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமை ஏற்று மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்கிறார்.
அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் ஐபிஎஸ் நட்ராஜ், அதிமுக அம்மா பேரவை இணைச்செயலாளர் ஜெ. ஜெயவர்த்தன், மயிலாப்பூர் மேற்கு பகுதி கழக செயலாளர் விஜய்பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
காமராஜர் சாலை ஆர்ஏ புரம் பகுதியில் இருந்து பில்ரோத் மருத்துவமனை பகுதியைத் தாண்டியும் அதிமுக சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றும், கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.