தமிழகம்
செயற்கை முறையில் பழுக்க வைத்த 2.5 டன் கெட்டுப்போன மாம்பழங்கள் பறிமுதல்
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மூன்று குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தினசரி மார்க்கெட், கே எஸ் சி பள்ளி சாலை, அரிசிகடை வீதி, வெள்ளியங்காடு மற்றும் பல குடோன் வீதி ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 10 குடோன்கள் மற்றும் 15 கடைகளில் இருந்து, 2.5டன் அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மற்றும் கெட்டுப்போன மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ஆகும்.
இதையடுத்து செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த 3 மொத்த விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இவ்வாறு செயற்கையான முறையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படும்.
பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும். ரசாயனங்களை வைத்து பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க கூடாது என மாம்பழ விற்பனை உரிமை யாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.