அரசியல்
மாநகராட்சி நிர்வாகம் மிகவும் மெத்தனமாக இருக்கிறது: செல்லூர் ராஜு!
‘மாநகராட்சி நிர்வாகம் மிகவும் மெத்தனமாக இருக்கிறது. மாநகராட்சியை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர், கழிவு நீர், பாதாளச் சாக்கடை, சாலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமாரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, ‘மாநகராட்சி நிர்வாகம் மிகவும் மெத்தனமாக இருக்கிறது. மாநகராட்சியை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மாநகராட்சியை குற்றம்சாட்டி எம்.எல்.ஏ., துணை மேயர் ராஜினாமா செய்வதாக அறிவித்ததில் இருந்தே மாநகராட்சியின் நிலை அனைவருக்கும் தெரியும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
மாமன்னன் படம் பார்க்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. வேகமாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிசாமி புதிய வாகனம் வாங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமி வல்லவனுக்கு வல்லவன். அதிமுக வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அரசுக்கு எதிராக வாயே திறக்கவில்லை என்றாலும்கூட கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யும்போதுதான் கட்சிகள் திமுக கூட்டணியில் இருக்குமா என தெரிய வரும். தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணி முடிவு செய்யப்படும். கூட்டணி விவகாரத்தில் தமிழ்நாடு மக்கள் நலன் கருதி ஜெயலலிதா போல தைரியமான முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுப்பார்’ என்று கூறினார்.
You must be logged in to post a comment Login