தமிழகம்
மழையால் மாட்டிக்கொண்ட பட்டாசுகள் ! சிக்கிய கேட்டரிங் உரிமையாளா்..!
சென்னை நெசப்பாக்கம் 11வது தெருவில் உள்ள வீட்டில் ஒன்றில் நாட்டுப் பட்டாசுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக எம்ஜிஆர் நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இத்தகவலின்படி , நேற்று இரவு போலீஸார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக நாட்டு பட்டாசுகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸாா் இதனை சட்டவிரோதமாக விற்ற செல்வகுமாா் (38) என்பவரை பிடித்து, விசாரணை நடத்தினா்.இதில், அவா் கூறியதாவது, கேட்டரிங் தொழில் செய்துவருவதுடன் , வேலூர், ஆற்காடு, புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து நாட்டுப் பட்டாசுகளை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து நெசப்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து வந்ததையும், சில தினங்களுக்கு முன்பு மழை பெய்ததால், வீட்டில் தண்ணீர் புகுந்து பட்டாசுகள் நனைந்து விட்டது. அதனால் அவற்றை வெளியே எடுத்து காய வைத்ததாக ஒப்புக்கொண்டாா்.
இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதனடிப்படையில், செல்வகுமார் மீது வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.