தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் பகுதியில் 211 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்ட பின், அந்த பள்ளத்தை முறையாக மூடுவதில்லை. உடனடியாக சாலையும் அமைப்பதில்லை.
இதன் காரணமாக பம்மல் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மிக மோசமாக மாறியுள்ளது. குறிப்பாக பொழிச்சலூர் சாலை, பல்லாவரம் சாலை. சிக்னல் ஆபிஸ் ரோடு, நல்லதம்பி ரோடு என அப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மிக மோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக மாறிவிட்டது.
பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் பணி முடிந்த சாலைகளை உடனுக்குடன் சீரமைத்து, புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை.
இன்னும் சில மாதங்களில், மழைக்காலம் துவங்கிவிடும். அப்போது நிலைமை இன்னும் மோசமாகிவிடும். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.