சினிமா
நாங்குநேரி குறித்து இயக்குநர் அமீரின் பதிவு !
நாங்குநேரி சம்பவம் குறித்தும் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் அமீரும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
‘திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரியில் பள்ளி மாணவனையும் அவனுடைய இளம் தமக்கையையும் வெட்டி சாய்த்த அரிவாளின் பின்னணியில் சாதியம் இருக்கிறது என்பதும் ஓடிய ரத்தம் தமிழரின் குருதி என்பதும், இப்பாதக செயலில் ஈடுபட்டது பள்ளி மாணவர்கள் என்பதும் உண்மையிலேயே என்னை பேரதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
சாதி மதங்களை கடந்து ஒன்றால் கலந்து திரிந்து ஒரு தட்டில் உண்ண மாணவர் சமூகத்திலேயே இந்த வன்மம் தலைத்தூக்கி நிற்பதும் அதன் பின்னணியில் பெற்றோர்களின் வளர்த்தெடுத்தல் அடங்கி இருப்பதும் சாதி தீயை அணைய விடாமல் சில சுய லாப சாதி அமைப்புகள் நிறைவேற்றி வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதெல்லாம் அவமானத்துக்குரியதாக அமைந்திருக்கிறது.
’வேங்கை வயலை’ போல் வேடிக்கை பார்க்காமல் இனியும் இது போன்ற தமிழகத்தில் எங்கும் நடந்திடாமல் காக்கும் பெரும் பொறுப்பு தமிழக அரசின் கைகளில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். மேலும், சாதிய விழிப்புணர்வு போரை தமிழகத்தில் தொடங்க வேண்டியது தமிழர்களாகிய நமது தலையாய கடமையாகும்’ என்று நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான அமீர் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார்.
இப்பதிவானது இயக்குநர், அமீர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.