தமிழகம்
வரதட்சணை கேட்ட திமுக பெண் நிர்வாகி: கர்ப்பிணி பெண் தர்ணா!
வரதட்சணை கேட்ட திமுக பெண் நிர்வாகியை கண்டித்து கர்ப்பிணி பெண் பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கணவருடன் சேர்த்து வைக்கவும் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா, அழகாபுரி கிராமத்தை சேர்ந்த லட்சுமண நாராயணன் மற்றும் தமிழரசி தம்பதியினரின் மகள் ரம்யா (வயது 26), என்பவருக்கும், கரூர் அடுத்துள்ள காதப்பாறை ஊராட்சி அன்புநகர் 2-வது கிராஸை சேர்ந்த கனி ஓவியா என்ற கனிமொழி என்பவரது மகன் கவியரசன் (வயது 30) என்பவருக்கும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணமான நிலையில், ரம்யா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில், கவியரசன் தாய் திமுக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் கரூர் தொகுதி ஒருங்கிணைப்பாளரான கனிஓவியா என்ற கனிமொழி, 6 மாத கர்ப்பிணியாக உள்ள, மருமகள் ரம்யாவை அடிக்கடி வரதட்சணை கேட்டும், கணவன் மனைவியை சேர்ந்து வாழ விடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரம்யா கூறும் போது,
2 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, எனது கணவருக்கு வெளியூரில் வேலை கிடைத்து விட்டதாக கூறி, எனது பெற்றோர் வீட்டிற்கு மாமியார் கனிமொழி என்னை அனுப்பி விட்டார். நாட்கள் கடந்த நிலையில், எனது கணவரை சந்திக்க வரும்போதும், கணவரை தனிமையில் சந்திக்கவும் மறுக்கிறார்.
அதுமட்டுமின்றி எனது மாமியார் கனிமொழி மூன்றாம் நபர் ஒருவரிடம் தவறான பழக்க வழக்கத்தில் இருந்தது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் எனது கணவருடன் சேர்ந்து வாழ மறுக்கிறார். 50 பவுன் நகை போதாது என்று, மேலும் வரதட்சணை கேட்கிறார். கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் என்னை சேர்ந்து வாழ விடாமல், நீதிமன்றத்தில் சந்திப்பதாக கூறி அலை கழிப்பதாக தெரிவித்தார்.