திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில், வயதான விவசாய தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இதேபோல், பல்லடம் பகுதியிலும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த இரண்டு சம்பவங்களும, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், மேற்கண்ட 2 சம்பவங்களையும் குறிப்பிட்ட அவர், திமுக அரசு, தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும், திமுக அரசுக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், வருமுன் காப்பதும் இல்லை, பட்டும் திருந்துவது இல்லை என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டு, திமுக அரசை விமர்சித்துள்ளார். தொடர்ந்து, வெற்று விளம்பரங்களால், மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது என்றும், முதலமைச்சரை, எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.