மதுரை மாநகர் சர்வேயர்காலனி அருகே உள்ள ஆவின் நகரை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் (41). இவர் சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவருடைய வீடு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடடைந்த அக்கம் பக்கத்தினர் திருப்பாலை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரமேஷ் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரமேஷ் செய்து வந்த ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அதிக கடன் சுமை காரணமாக தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து திருப்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் ராணுவ வீரர் தனது குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.