தமிழகம்
வெடித்து சிதறிய கொதிகலன் ! அச்சத்திற்குள்ளான மக்கள் !
மணப்பாறை அருகே பால் குளிரூட்டும் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததால் எழுந்த பெரும் சத்தமும், வாயு கசிவும் அப்பகுதி மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலப்பட்டி பிரிவு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான பால் குளிரூட்டும் நிலையம் இயங்கி வருகிறது. திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த தொழிற்சாலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெறப்படும் பால் குளிரூட்டப்பட்டு, அதன்பின்பு அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது .
இன்று காலையில் பால் குளிரூட்டும் நிலையத்தில் உள்ள நீராவி கொதிகலன் திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்தது. அதிலிருந்து அமோனியம் குளோரைடு வாயு கசிந்தது. கொதிகலன் வெடித்ததில் தொழிற்சாலை மேல் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைகள் பல அடி தூரம் பறந்து சென்றது. அந்த நேரத்தில் பணி செய்பவர்கள் யாரும் உள்ளே இல்லாததால் ,மாபெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் அமோனியம் குளோரைடு வாயு கசிவு ஏற்பட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டார பொதுமக்களுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டது. காற்றில் பரவிய வாயுவால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொதிகலன் வெடிப்பால் பல கோடி ரூபாய் சேதம் என கூறப்படும் நிலையில் இந்த விபத்தில் மணப்பாறை சுற்றியுள்ள 5 கிராமங்களில் முன் எச்சரிக்கை காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.