விருதுநகர் அருகே தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் – கீழஉப்பிலிக் குண்டு சாலையில் ஒரு தனியார் கிரஷர் (கல்குவாரி) உள்ளது.
இந்த கிரஷரில் சல்லி, எம் சான்ட் போன்ற பொருட்கள் பாறைகளில் இருந்து உடைக்கப்படுகிறது.
இந்நிலையில் பாறைகளை வெடிக்கக் கூடிய வெடிமருந்துகள் கிரஷரின் அருகே உள்ள ஒரு அறையில் இன்று காலை இறக்கிய போது வெடிமருந்துகள் வெடித்ததில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனித உடல்கள் காட்டுப் பகுதியில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.
விபத்து நடந்த பகுதிக்கு அருகே இருந்த இரண்டு வாகனங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் வெடி மருந்துகள் இருப்பதாகவும் இதனால் அந்த பகுதிக்கு தீயணைப்பு துறையினர் போலீசார் அருகே செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்த வெடி விபத்தின் போது இப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன.