இந்தியா
குடும்ப தகராறு: மூன்று குழந்தைகளுடன் தாய் தற்கொலை!
ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டம் காலிவீடு மண்டலம் சிலக்கலூரிப்பேட்டையில் தாய் தனது மூன்று குழந்தைகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிலக்கலூரிப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விக்ரம்- வெமுலா நாகராணி (30) தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நவ்யஸ்ரீ (10), தினேஷ் (6), ஜாஹ்னவி (3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று (ஏப்.19) நாகராணிக்கும் கணவர் விக்ரமுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் நாகராணி தனது மூன்று குழந்தைகளுடன் வெலுகல்லு அருகே உள்ள கந்திமடுகு ஏரி கால்வாயில் தற்கொலை செய்துள்ளார்.
இதையடுத்து நாகராணியின் உறவினர்கள் கந்திமடுகு கரையில் செருப்பு மற்றும் செல்போனை கண்டெடுத்தனர். மேலும், உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை கந்திமடுகு நீரில் மிதந்த நிலையில் இருந்த சடலங்களை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட போலீசார் குடும்ப தகராறு காரணமாக தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.