தமிழகம்
ரயிலில் தொடரும் தீப்பிடி சம்பவங்கள்!சிதறி ஓடிய பயணிகள்!
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், தெலங்கானா அருகே வந்து கொண்டிருந்த போது, ரயிலின் சக்கரத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனால் தூக்க கலக்கத்தில் இருந்த பயணிகள், தீ விபத்து பற்றி அறிந்ததும் அலறியடித்துக் கொண்டு இறங்கினர்.டெல்லியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் 32 மணி நேர பயணத்திற்கு பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 7.10 மணியளவில் வந்தடையும்.
அதன்படி, ஆகஸ்ட் 5ம் தேதி இரவு 10.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.தெலங்கானா மாநிலம் பேலம்பள்ளி அருகே வந்த போது ரயிலின் ஏ.சி பெட்டியின் சக்கரத்தில் திடீரென தீ பிடித்தது. இதனால், ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அலறியடித்தப்படியே கீழே இறங்கினர் . தகவல் அறிந்து காவல்துறையினர் தீயணைப்பானைக் கொண்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து காரணமாக அரை மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.