தமிழகம்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது
சென்னை குரோம்பேட்டை, நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் மலர்(43),. இவர் ஷூ கம்பெனி ஒன்றில் பணிபுரிந்த போது குணசுந்தரி என்பவரும் அவருடன் பணிபுரிந்துள்ளார்.
அப்போது அவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவர் தன்னுடைய மகள் சுகன்யா(28), அரசியல் பிரமுகர்களிடம் செல்வாக்காக உள்ளார். அதனால் நீங்கள் பணம் கொடுத்தால் உங்கள் மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அவரும் அரசு வேலை கிடைத்து விடும் என நம்பி 5 லட்சம் ரூபாயை பல தவணைகளாக சுகன்யாவிடம் கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து வெகு நாட்கள் ஆகியும் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை,. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மலர் குரோம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் குரோம்பேட்டை காவல் துறையினர் நம்ப வைத்து மோசடி செய்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோசடி பெண் சுகன்யாவை கைது செய்தனர்.
விசாரணையில் அப்பெண் பல பேரிடம் தான் ஆளும் கட்சியில் முக்கிய பிரமுகர் ஒருவரின் உதவியாளராக இருப்பதாகவும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் 18 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.